வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. !

03 பிப்ரவரி 2012

படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்





ஒரு தனி விமானத்தில் விஞ்ஞானிள் பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மட்டும் பைபிளை (பரிசுத்த வேதாகமம்) படித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த மற்றொரு விஞ்ஞானி, இப்போது உள்ள அறிவியல் உலகத்தில் கடவுள், பைபிள் என்று படித்துக் கொண்டு இருக்கிறீரே? என்று கேட்டு விட்டு, தனது முகவரியை கொடுத்து, இனியாவது கடவுளைத் தூக்கிப் போட்டு விட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
விமானம் தரை இறங்கியவுடன் மீண்டும் அவரை சந்தித்த விஞ்ஞானி உங்கள் முகவரியை கொடுங்கள் நான் வந்து பார்க்கிறேன் என்றார். அவர் தனது விசிட்டிங் கார்டை கொடுத்தார். அதில் தாமஸ் ஆல்வா எடிசன் என்று இருந்தது. உடனே அவரிடம் மன்னிப்பு கேட்டதுடன், அவரை தனியாக வீட்டில் சந்திக்க நாளையும் பெற்றுக் கொண்டு சென்றார்.
குறிப்பிட்ட நாளில் அந்த விஞ்ஞானி, தாமஸ் ஆல்வா எடிசன் வீட்டிற்கு சென்றார். அங்கு ஏராளமான கண்டுபிடிப்புகள் இருந்தன. அவற்றை பார்த்து, நீங்கள் தானே இதை செய்தது என்று கேட்டார். அதற்கு இல்லை நான் ஒரு நாள் வெளியில் சென்று விட்டு, மீண்டும் வந்து வீட்டு கதவை திறந்த போது இதெல்லாம் இருந்தது என்றார்.
படைப்பு இருந்தால் கண்டிப்பாக படைப்பாளியும் இருப்பார் என்று விஞ்ஞானி கூறினார். பின்னர் தாமஸ் ஆல்வா எடிசன், தான் கண்டுபிடித்ததை ஒப்புக் கொண்டார்.
இது ஒரு கதை.
இந்த கதையை சொன்ன மனிதர் ரஜினிகாந்த்.
கனடா நாட்டின் இயல் விருதை பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு 02.02.2012 அன்று சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசும் போது ரஜினிகாந்த் இந்த கதையை கூறினார்.
தொடர்ந்து அவர், இதை கதையாக நினைக்க வேண்டாம். விஞ்ஞானி கூறியதை சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும், படைப்பு என்று ஒன்று இருந்தால் அதை படைத்த படைப்பாளியும் கண்டிப்பாக இருப்பார். எனவே கடவுள் இருப்பது உண்மை என்றும் கூறினார்.
நன்றி ரஜினிகாந்த் அவர்களே...
(கடவுளின் ஞானத்தைப் பெற்றே உலகிற்கு பல்வேறு கண்டுபிடிப்புகளை கொடுத்துள்ளார் எடிசன் என்பது குறிப்பிடத்தக்கது) 

கடவுள் இருக்கிறாரா, இல்லையா?
இந்த விவாதம் காலகாலமாய் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிமிடம் வரை நாசியில் சுவாசத்தைப் பெற்று உயிரோடு வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள், கடவுளின் அன்பையும், அவரின் அளவில்லாத கிருபையையும் பெற்று உணர்ந்தவர்கள் அவர் இருக்கிறார் என்று கூறுகின்றனர்.
சுவாசம் நின்று போனால் எல்லாம் போய் விடும் என்று தெரிந்திருந்தும், அறிவியலின் துணை கொண்டு படைப்புகள் அனைத்தின் முற்காலம், தற்காலம் குறித்து அறிந்திட முனைவோர் அப்படி ஒருவன் இல்லை என்று வாதிடுகின்றனர். காலத்தின் மாற்றத்தில் இவ்வாறு விவாதம் செய்தவர்கள் படைத்தவனை உணர்ந்து கடவுளாக ஏற்று வாழ தொடங்குகின்றனர்.

மனிதனை நல்வழிப்படுத்த அனைத்து மதங்களும் கடவுள் ஒருவர் உண்டு என்று வலியுறுத்துகின்றன.
ஒவ்வொரு படைப்பையும் உற்று நோக்கும் போது அதில் படைத்தவனின் கலையம்சம் நிச்சயம் தெரியும்.
படைப்பிற்கான நோக்கமும் அதில் இருப்பது தெரியவரும்.

அறிவியல் வளர்ச்சியில் ஆண்டவன் இல்லை என்று வாதிடுவோரும் உண்டு.  ஏற்கனவே படைக்கப்பட்டவற்றை அடிப்படையாக கொண்டுதான் அறிவியல் ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
கடவுள் மனிதனை படைக்கவில்லை. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று கூறுகின்றனர். அதை ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால்கூட, பரிணாம வளர்ச்சியில் இன்று குரங்கினமே அழிந்து இருக்க வேண்டும். எல்லா குரங்குகளும் மனிதர்களாக மாறி இருக்க வேண்டும். ஆனால் மனித இனம், குரங்கினம் ஆகிய இரண்டு இனங்களும் இன்றும் தொடர்ந்து பெருகி கொண்டிருக்கின்றனவே எப்படி?
வாதம் செய்ய நான் இதை கூறவில்லை. அது என் நோக்கமும் இல்லை.
என்னுடைய அறிவுக்கு எட்டியதை எழுதுகிறேன்.
படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவைப் படைத்தான் தன்னை வணங்க- இந்த சிம்பிள் லாஜிக் புரிந்தாலே போதும் கடவுள் உண்டு என்பதற்கு.
பரிசுத்த வேதாகமத்தின் (பைபிள்) தொடக்கமே படைப்பு குறித்தது தான். ஆறு நாட்கள் படைப்புத் தொழில் மேற்கொள்ளப்படுகிறது. ஏழாம் நாள் ஓய்வு.
படைப்பின் அனத்து விவரங்களும் ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.

தேவன் கரத்தின் கிரியைகள் நாம்

ஆண்டவனின் கை தேர்ந்த படைப்பு மனிதன்.
மனிதனின் உடல் அமைப்பே இதற்கு சான்று.
தலை முதல் கால் வரை எந்த இடத்தில் எந்த உறுப்பு இருக்க வேண்டும், எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை நிர்ணயித்தது யார்? அவை எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும், அதற்குறிய விதிகளை அமைத்ததும் யார்?
பல்லாயிரம் கேபிள்களை போல நாடி நரம்புகளை மேனிக்கு உள்ளே அமைத்தது யார்? அவற்றிற்கு இயக்கம் தந்தது யார்? நாசியில் சுவாசம் உள்ளவரை இவற்றின் இயக்கங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் யார்?
இப்படி எத்தனையோ யார்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம். இவை அனைத்திற்கும் ஒரே பதில் இறைவன் என்பதுதான்.

எத்தனையோ வழிகளில் இறைவனும் தன்னை உணர்த்திக் கொண்டே இருக்கிறார். மனித மனம்தான் அதை உணர மறுக்கிறது.

படைத்த அனைத்துமே படைத்தவனின் நோக்கம் அறிந்து தன்னுடைய வேலையை சரியாக செய்து கொண்டிருக்கிறது மனிதனைத்தவிர.
இதை உணர்ந்தவர்கள் கடவுளின் துணையோடு உயர்ந்த வாழ்வு வாழ்கின்றனர். அப்படி வாழ்பவர்களில் ஒருவரே ரஜினிகாந்த். கடவுளை உணர்ந்த அவர், அதை உரைத்திட்டார் உலகுக்கு.
இல்லை என்போர் எதைக் கூறினாலும் ஏற்க மாட்டார்கள். அவர்களும் கடவுளை உணரும் நாள் நிச்சயம் வ்ரும்.

தேவனின் பரிசுத்த நாமத்திற்கு
கோடான கோடி நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக